குவா மூசாங், மே 14: கிளந்தான், குவா மூசாங் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் 55 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை 11.38 மணியளவில், ஜாலான் லாடாங் செராசாவில் (Jalan Ladang Serasa) உள்ள ரப்பர் தோட்டத்திற்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் அந்த நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, பாலோ 2 (Paloh 2) காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இது குறித்து குவா மூசாங் மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்பிரிண்டெண்டென் சிக் சூன் ஃபூ கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளின் கால்தடங்களும், சாணங்களும் அதிகளவில் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், அந்த நபர் காட்டு யானைக்கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என்பது வலுவாகக் கருதப்படுகிறது.
"பூர்வாங்கப் பரிசோதனையில் இந்தச் சம்பவத்தில் எவ்விதக் குற்றச் செயல்களும் நடந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் குவா மூசாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, காடு மற்றும் தோட்டப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.







