ஷா ஆலம், மார்ச் 26 - சமூக ஊடகங்களில் பரவி வரும் 2026-ஆம் ஆண்டுக்கான ஹரிராயா கொண்டாட்ட அழைப்பு மற்றும் நிதி வசூல் தொடர்பான தகவல்களுக்கும், சிலாங்கூர் மாநிலக் காவல்துறைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் வெளியிட்டுள்ளார்.
இன்று, மார்ச் 26-ஆம் தேதி சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைமையகத்தின் (IPK) பல்நோக்கு மண்டபத்தில் ஹரி ராயா பெருநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளதாகப் பகிரப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில தனிநபர்களின் வங்கி கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறு கோரப்படும் கோரிக்கைகளுக்கும் காவல்துறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
"சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைமையகத்தின் பாதுகாப்புப் பிரிவு (Cawangan Pengawal Pengiring) இத்தகைய கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருப்பதாகப் பரவும் செய்திகள் பொய்யானவை.
இது பொதுமக்களிடமிருந்து பணத்தைச் சுருட்டவும், ராயல் மலேசியக் காவல்துறையின் (PDRM) நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும் மேற்கொள்ளப்படும் ஒரு மோசடிமுயற்சியாகும்," என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய போலியான குறுஞ்செய்திகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளுக்கு எந்தவிதப் பணப் பரிமாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒருவேளை ஏற்கனவே யாராவது பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
காவல்துறையின் அடையாளத்தையோ அல்லது பெயரையோ பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டத்தோ ஷாசெலி கஹார் எச்சரித்துள்ளார்.








