ஈரான் எரிசக்தி மையங்கள் மீது அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

24 மார்ச் 2026, 7:02 AM
ஈரான் எரிசக்தி மையங்கள் மீது அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

இஸ்தான்புல், மார்ச் 24 – ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஈரானின் இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணம் மற்றும் தென்மேற்கு நகரமான கோரம்ஷார் (Khorramshahr) ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக 'அனடோலு அஜான்சி' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ஃபஹான் நகரில் உள்ள இயற்கை எரிவாயு நிர்வாகக் கட்டிடம் மற்றும் எரிவாயு அழுத்தக் குறைப்பு நிலையம் ஆகியவை தாக்குதலுக்குள்ளானதில், அந்த வளாகமும் அருகிலுள்ள குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளதாக 'ஃபார்ஸ்' செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதேவேளையில், கோரம்ஷார் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்குச் சொந்தமான இயற்கை எரிவாயு குழாய்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், ஏவுகணை நிலையத்திற்கு வெளிப்புறத்திலுள்ள பகுதியில் விழுந்ததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வளவு பெரிய தாக்குதல்கள் நடந்தபோதிலும், மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக 48 மணி நேரத்திற்குள் ஈரான் முழுமையாகத் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா "நிர்மூலமாக்கும்" என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக, ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களுக்கு ஆதரவளிக்கும் பிராந்திய எரிசக்தி வலைப்பின்னல்கள் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மீது உடனடி "பழிவாங்கும்" தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.

வியக்கத்தக்க வகையில், கடந்த இரண்டு நாட்களாக தெஹ்ரானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் "மிகவும் ஆக்கப்பூர்வமாக" இருந்ததாகக் கூறி, ஈரான் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டதாக அதிபர் ட்ரம்ப் திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.

இருப்பினும், அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் இந்தப் போர்ச் சூழலில், ஈரானும் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளைத் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.