கோலாலம்பூர், மார்ச் 20 – மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இது குறித்து பிரதமர் அன்வார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களை மலேசியா வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். மலேசியாவின் இந்த உறுதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டை அவர் இந்தியப் பிரதமரிடம் தெளிவுபடுத்தினார்.
"அமைதி மற்றும் வழிபாட்டிற்குரிய புனித ரமலான் மாதத்தில், மேற்கு ஆசியாவில் நிலைமை மோசமடைந்து வருவது குறித்து எங்களது கலந்துரையாடல் அமைந்தது. போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமைதி, ராஜதந்திரம் மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை வலுப்படுத்துவதற்கும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உடன்பட்டுள்ளோம்," என்று அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் பிரிக்ஸ் (BRICS) போன்ற சர்வதேச தளங்களில் மலேசியாவும் இந்தியாவும் இணைந்து தங்களது குரலை வலுப்படுத்த வேண்டும் என்பதில் இரு தலைவர்களும் ஒருமித்த கருத்தை எட்டினர். குறிப்பாக, உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்ள இத்தகைய கூட்டாண்மை மிகவும் அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
"இறைவன் நாடினால், உலகளாவிய அமைதியை நிலைநாட்ட மலேசியாவும் இந்தியாவும் தங்களது அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தும்," என்று பிரதமர் அன்வார் தனது பதிவில் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.








