புத்ராஜெயா, மார்ச் 15: கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் (KBR) விரிவாக்கப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அது நாளை முதல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய விரிவாக்கத்தின் மூலம், மாநிலத்தின் வான்வழிப் போக்குவரத்து வசதிகள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.
புதிய முனையத்தின் (Terminal) விரிவாக்கமானது பயணிகளை கையாளும் திறனை 1.5 மில்லியனில் இருந்து 4 மில்லியனாக உயர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 1.7 மில்லியனை எட்டியதுடன், இது முந்தைய ஆண்டை விட 16.2 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது.
எனவே, அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை ஈடுகட்ட இந்தத் திறன் அதிகரிப்பு மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட இந்த விமான நிலையத்தில் பயணிகள் தடையின்றி பயணிப்பதை உறுதி செய்யப் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விசாலமான முனையக் கட்டிடம், பயணிகள் வருகை மற்றும் புறப்பாட்டிற்கான தனித்தனி தளங்கள், பேருந்துகள், டாக்சிகள் மற்றும் இ-ஹெய்லிங் (E-hailing) சேவைகளுக்கென பிரத்யேகப் பாதைகள் கொண்ட புதிய கட்டமைப்பு போன்றவை இதில் அடங்கும். குறிப்பாக, எதிர்வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பயணிகளின் நெரிசலைக் குறைக்கவும், அவர்களுக்குச் சிறந்த பயண அனுபவத்தை வழங்கவும் இந்த மாற்றங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மேம்பாட்டு நடவடிக்கை கிளந்தான் மாநிலத்தின் சுற்றுலாத் துறை, வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விமான நிலையத்தில் ஐந்து விமான நிறுவனங்கள் செயல்பட்டு வருவதுடன், ஆறு உள்நாட்டு வழித்தடங்கள் மற்றும் சிங்கப்பூருக்கான ஒரு சர்வதேச வழித்தடம் என மொத்தம் ஏழு வழித்தடங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விரிவாக்கப்பட்ட முனையத்தின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழா குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.










