ஷா ஆலம், மார்ச் 15: ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் விபத்துகள் அதிகம் நிகழக்கூடிய 288 'ஹாட்ஸ்பாட்' (Hotspot) இடங்களை சாலைப் போக்குவரத்து வாரியம் (ஜேபிஜே) அடையாளம் கண்டுள்ளது. இப்பகுதிகளில் விபத்துகளைத் தவிர்க்கவும், போக்குவரத்து விதிமுறைகளை உறுதிப்படுத்தவும் ஜேபிஜே அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
பெருநாள் காலத்தில் ஜேபிஜே-வின் அனைத்து அமலாக்க வாகனங்களும் சாலைகளில் ரோந்துப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் என ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ எடி ஃபட்லி ராம்லி தெரிவித்தார். "இந்தக் காலத்தில் எந்தவொரு அமலாக்க வாகனமும் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்படாது; அவை அனைத்தும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளிலேயே இருக்கும்," என்று ஷா ஆலம் செக்சன் 17 பேருந்து முனையத்தில் நடைபெற்ற 'இஹ்யா ரமலான்' நிகழ்ச்சியின் போது அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, பேராக் மாநிலத்தின் மெனோரா சுரங்கப்பாதை போன்ற பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பு (AWAS), வாகன ஓட்டிகளிடையே விதிமுறை விழிப்புணர்வை அதிகரித்துள்ளதோடு விபத்து விகிதத்தையும் குறைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முதல் இரண்டு வாரங்களுக்குத் தொடரவுள்ள 'ஒப்பராசி ஹரி ராயா' (Operasi Hari Raya) நடவடிக்கையில் நாடு முழுவதும் சுமார் 3,000 அதிகாரிகள் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இந்தச் சிறப்புச் சோதனையின் போது ஒன்பது முக்கிய விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிவேகப் பயணம், போக்குவரத்துச் சமிக்ஞைகளை மீறுதல், இருகோட்டுப் பாதையில் முந்துதல், அளவுக்கு அதிகமான சுமை ஏற்றுதல் மற்றும் வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும். மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யப் பேருந்து முனையங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்படுவதோடு, விரைவுப் பேருந்துகளில் அதிகாரிகள் சாதாரண உடையில் பயணம் செய்து கண்காணிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்களுக்கான பயணத் தடையும் இவ்வாண்டு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, மார்ச் 19, 20 மற்றும் மார்ச் 28, 29 ஆகிய நான்கு தினங்களில் கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.








