ஷா ஆலம், மார்ச் 20 – ஹரிராயா ஐடில்பித்ரி பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் மின்சாரம் மற்றும் நீரின் பயன்பாடு அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் இவற்றை மிகவும் சிக்கனமாகவும், பொறுப்புடனும் பயன்படுத்துமாறு துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான (PETRA) டத்தோ அமார் ஃபடில்லா யூசோப் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநாள் காலங்களில் வீடுகளில் மின்சாரப் பயன்பாடு வழக்கத்தை விட 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், மக்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால், குறிப்பிட்ட மாநிலங்களில் நீரின் பயன்பாடு 30 முதல் 35 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த, தேவையற்ற விளக்குகள் மற்றும் மின்சாதனங்களை அணைத்து வைப்பது, குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸில் பராமரிப்பது மற்றும் 4 அல்லது 5 நட்சத்திரக் குறியீடு கொண்ட மின்சாதனங்களைப் பயன்படுத்துவது போன்ற எளிய வழிமுறைகளை அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
நீரைப் பொறுத்தவரை, குழாய் கசிவுகளை உடனே சரிசெய்தல், மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல், துணிகளைச் சேர்த்துத் துவைத்தல் மற்றும் செடிகளுக்குப் பயன்படுத்திய நீரை மறுசுழற்சி செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறித்து எச்சரித்த டத்தோ அமார் ஃபடில்லா, பழுதான மின் கம்பிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், மின் இணைப்புகளை (Socket) அதிகப்படியாக பயன்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். குறிப்பாக, எஸ்.டி-சிறிம் (ST-SIRIM) பாதுகாப்பு முத்திரை கொண்ட அலங்கார விளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், கைப்பேசியை மின்னூட்டம் (Charge) செய்யும் போது பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த முயற்சிகள் அனைத்தும் 'மலேசியா மடாணி' கொள்கையின் ஒரு அங்கமாகும் என்று குறிப்பிட்ட அவர், வளங்களைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம் மக்கள் பாதுகாப்பான மற்றும் நிம்மதியான பெருநாளைக் கொண்டாடுவதுடன், நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என்று தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.








