சபாக் பெர்ணம், மார்ச் 13: சிலாங்கூர், சபாக் பெர்ணம் மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 74 சதவீதம் உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் 41,032 ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இறுதியில் 71,414 ஆகப் அதிகரித்துள்ளதாகச் சபாக் பெர்ணம் மாவட்ட அதிகாரி அலி சாடிக்கின் சாடின் தெரிவித்துள்ளார்.
சபாக் பெர்ணம் மாவட்டம் தற்போது ஒரு தனித்துவமான கிராமப்புறச் சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளதை இந்த எண்ணிக்கை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். நெல் வயல்கள், கிராமப்புறத் தங்கும் விடுதிகள் (Homestay), கடற்கரை பகுதிகள் மற்றும் கெலோங் பாரடைஸ், சுங்கை பாஞ்சாங் மின்மினிப் பூச்சிகள் பாதுகாப்பு மையம் போன்ற இயற்கை எழில்மிகு இடங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன.
தனியார் துறையின் பங்களிப்பும் இந்த வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது. குறிப்பாக, நெல் சாகுபடியின் வரலாற்றைப் பறைசாற்றும் சிகிஞ்சான் நெல் அருங்காட்சியகம் மற்றும் 90-களின் நினைவுகளைத் தூண்டும் 'ஆ மா ஹவுஸ்' (Ah Ma House) போன்ற புதுமையான சுற்றுலா தயாரிப்புகள் பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகப் பொதுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும், பராமரிப்பு நடவடிக்கைகளும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அலி சாடிக்கின் தெரிவித்தார்.
மேலும், மாநில அரசாங்கம் முன்னெடுத்துள்ள 'சபாக் பெர்ணம் மேம்பாட்டு மண்டல' (SABDA) திட்டம், இந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், உணவுப் பாதுகாப்பு, நவீன விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்துகிறது.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) கீழ் சிகிஞ்சானில் 415 ஏக்கர் பரப்பளவிலான மீன் இறங்கு தளம் மற்றும் சுங்கை லாங்கில் 460 ஏக்கர் பரப்பளவிலான மீன் வளர்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
சபாக் பெர்ணம் மாவட்டத்தின் சமூகப் பொருளாதாரம் இன்னும் விவசாயத்தைச் சார்ந்தே இருந்தாலும், நவீன விவசாய உணவு உற்பத்தி, மீன்பிடித் தொழில் மற்றும் ஆக்கப்பூர்வமான சுற்றுலாத் துறையில் இந்த மாவட்டத்திற்கு இருக்கும் அபார ஆற்றல் எதிர்காலத்தில் இதனை ஒரு சிறந்த 'அக்ரோபாலிட்டன்' (Agropolitan) மாவட்டமாக மாற்றும் என்று அலி சாடிக்கின் நம்பிக்கை தெரிவித்தார்.








