பெட்டாலிங், கிள்ளானில் குடிநுழைவுத்துறை  நடவடிக்கை: 42 வெளிநாட்டினர் கைது

12 மார்ச் 2026, 7:50 AM
பெட்டாலிங், கிள்ளானில் குடிநுழைவுத்துறை  நடவடிக்கை: 42 வெளிநாட்டினர் கைது

ஷா ஆலாம், மார்ச் 12: கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் சிலாங்கூர் குடிநுழைவுத்துறை (JIM) நடத்திய 'ஓப்ஸ் செலெரா' மற்றும் 'ஓப்ஸ் கெகார்' நடவடிக்கைகளில் மொத்தம் 42 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் புகார்களை தொடர்ந்து, 22 குடிநுழைவுத்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் மாலை 5 மணிக்கு இந்த நடவடிக்கையை தொடங்கினர் என்று சிலாங்கூர் குடிநுழைவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோத்தா கெமுனிங் மற்றும் கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜா ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், மசாஜ் மையங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்ட பல வணிக வளாகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

"இந்த நடவடிக்கையின் விளைவாக, 47 நபர்கள் சோதனையிடப் பட்டனர். அவர்களில் 42 வெளிநாட்டினர் குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963-இன் கீழ் பல்வேறு குற்றங்களைச் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டனர்.

"கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இந்தோனேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு சாட்சி சம்மன்கள் வழங்கப்பட்டு, ஒரு முதலாளி மீதும் விசாரணைக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"கண்டறியப்பட்ட குற்றங்களில் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது பாஸ் இல்லாதது, அனுமதிக்கப்பட்ட காலக் கெடுவைத் தாண்டி தங்கியிருந்தது, மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963-இன் விதி 39B-இன் கீழ் செய்யப்பட்ட குற்றங்களும் அடங்கும்.

"கைது செய்யப்பட்ட அனைவரும் சட்டத்தின் கீழ் மேலதிக நடவடிக்கைக்காக செமினி குடி நுழைவுத் தடுப்புக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்," என்று அது கூறியது.

முதலாளிகளும் வெளிநாட்டினரும் நாட்டின் குடிநுழைவுச் சட்டங்களுக்குக் கட்டுப்படுவதை உறுதிசெய்ய, அமலாக்க நடவடிக்கைகள்  தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று சிலாங்கூர் குடிநுழைவுத்துறை வலியுறுத்தியுள்ளது.

"குடிநுழைவுத்துறை அதிகாரிகளாக நடிக்கும் அல்லது மோசடி நோக்கங்களுக்காக அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் படங்களைப் பயன்படுத்தும் எந்தவொரு தனிநபரையும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.