ஷா ஆலாம், மார்ச் 11: கிள்ளான், இண்டா தீவு தொழில்துறை பகுதியில் முறையான உரிமம் இல்லாமல் 14 கிலோகிராம் திரவ பெட்ரோலிய வாயுவை (LPG) விற்பனை செய்த ஒரு வணிக வளாகத்தை கிள்ளான் மாநகர சபை (MBDK) பறிமுதல் செய்தது.
ஜாலான் சுங்கை பினாங் 5/5-இல் அமைந்துள்ள ஒரு சிறு சந்தை வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அந்த வளாகத்திற்கு முறையான சிறு சந்தை உரிமம் இருந்தபோதிலும், எல்பிஜி விற்பனை உரிமம் இன்றி மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது என உள்ளூராட்சி மன்றம் தெரிவித்தது.
"அந்த வளாகத்திற்கு செல்லுபடியாகும் சிறு வியாபார உரிமம் இருந்தாலும், 14 கிலோகிராம் எல்பிஜி விற்பனை உரிமம் இல்லாமல் மேற்கொள்ளப் பட்டது சோதனையில் தெரியவந்தது.
அதோடு, சோதனையின் போது உள்ளூர் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது," என்று முகநூல் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிள்ளான் மாநகர சபையின் வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில் உரிம துணைச் சட்டம் (UUK) 3, 2007-இன் கீழ் இந்த பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், சாலை, வடிகால் மற்றும் கட்டிடம் சட்டம் 1974-இன் பிரிவு 46(1)(d)-இன் கீழ் ஒரு அபராதமும் விதிக்கப்பட்டது.
அதே நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இண்டா தீவு, பண்டார் அர்மாடா புத்ராவில் உள்ள ஜாலான் சுங்கை சண்டோங் 8-இல் உள்ள ஒரு வளாகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
"அந்த வளாகம், வணிக உரிமம் இல்லாமல் முடிதிருத்தகம் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. மேலும், அந்த வளாகம் உள்ளூர்வாசிகள் யாரும் இன்றி முழுமையாக வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது," என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.
இந்த வழக்கிற்காக, கிள்ளான் மாநகர சபையின் அழகு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு மையம் துணைச் சட்டம் (UUK) 3(1), 2013 மற்றும் வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில் உரிம துணைச் சட்டம் (UUK) 3, 2007 ஆகியவற்றின் கீழ் இரண்டு பறிமுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
உரிமம் இல்லாமல் அல்லது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறி செயல்படும் வளாகங்கள், குறிப்பாக வெளிநாட்டினரை உள்ளடக்கிய நடவடிக்கைகள் மீது தாங்கள் கடுமையான கவனம் செலுத்துவதாக கிள்ளான் மாநகர சபை வலியுறுத்தியது.
"சட்டத்தின் மாண்பையும், பொது அமைதியையும் உறுதிசெய்ய தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்," என்று அது கூறியது.








