பெட்டாலிங் ஜெயா மார்ச் 11 : சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதற்காக, பெட்டாலிங் ஜெயாவில் 2,500-க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் 2011-ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட RM1 மில்லியன் மதிப்பீட்டு வரித் தள்ளுபடி பெற்றுள்ளனர்.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (MBPJ) அறிமுகப்படுத்திய இந்தத் தள்ளுபடித் திட்டம், குறிப்பாக எரிசக்தி பயன்பாடு, நீர் சேமிப்பு மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் தங்கள் வீடுகளைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் குடியிருப்பாளர்களுக்கு வெகுமதி அளிக்கிறது.
பெட்டாலிங் ஜெயா மேயர், முகமது ஸஹ்ரி சமிங்கோன் கூறுகையில், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அதிலிருந்து தகுதியான வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தள்ளுபடி தொகை தற்போது கிட்டத்தட்ட RM 1 மில்லியனை எட்டியுள்ளன என்றார்.
2025-ஆம் ஆண்டில் மட்டும், RM81,075.28 மதிப்புள்ள 243 தள்ளுபடி விண்ணப்பங்களுக்கு MBPJ ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இந்தத் தொகை 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் தவணையில் குடியிருப்பாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
PJ Eco Rebate (PJeR) எனப்படும் புதிய இணையத் தளத்தின் மூலம் குடியிருப்பாளர்கள் இப்போது வரித் தள்ளுபடி க்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் அதன் நிலையைச் சரி பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் உள்ளூர் அதிகாரத்தால் உருவாக்கப்பட்ட முதல் முன்னோடி மின்னியல் திட்டமான இது, இதற்கு முந்தைய நேரடி விண்ணப்ப முறைக்கு மாற்றாக அமைந்துள்ளது.
"இந்த புதிய அமைப்பு மூலம், குடியிருப்பாளர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் மற்றும் ஆவணங்களை எளிதாகவும் விரைவாகவும் பதிவேற்றலாம்," என்று MBPJ தலைமையகத்தில் இந்தத் தளத்தை தொடங்கி வைத்த போது அவர் கூறினார்.
மேலும், இந்த ஆண்டு 'பெட்டாலிங் ஜெயா நீடித்த சமூக மானியத் திட்டத்திற்கு' (PJ SEED) RM500,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸஹ்ரி அறிவித்தார்.
2019-இல் அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து, இந்த மானியத் திட்டம் RM3.2 மில்லியன் முதலீட்டில் 180 சமூகத் திட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் மட்டும், RM513,000-க்கும் அதிகமான நிதியுதவியுடன் 27 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அமைப்புகள் மற்றும் சமூகங்கள் இடமிருந்து நீடித்த நிலைத்தன்மை தொடர்பான ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான யோசனைகளை ஊக்குவிப்பதற்கு இந்த முயற்சி ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.








