கோலாலம்பூர்: டாமன்சாரா ஷா ஆலம் உயர்மட்ட நெடுஞ்சாலையில் (DASH) போக்குவரத்து நெறிக்கு எதிராக காரை ஓட்டிச் சென்ற 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி இன்று மதியம் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அந்தப் பெண்மணி இன்று கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி ஷம்சுடின் மாமாட் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் நெடுஞ்சாலையின் 10.8 கிலோமீட்டரில் நிகழ்ந்துள்ளது. வீட்டிற்குத் திரும்பும் வழியில் வழிதவறிய சந்தேக நபர், நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறும் வழியைத் தேடி போக்குவரத்து நெறிக்கு எதிராக காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
"இந்தச் சம்பவத்தில் சந்தேக நபரின் வாகனம் மற்ற வாகனங்களுடனோ அல்லது வேறு பொருட்களுடனோ மோதி எந்தவொரு விபத்தும் ஏற்படவில்லை," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.
இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42 (1) பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக ஷம்சுடின் குறிப்பிட்டார்.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது அந்த இடத்தில் இருந்தவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் போக்குவரத்து விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் எஸ். ஜெயசீலனை 018-258 2531 என்ற எண்ணிலும் அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தை 03-7966 2222 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
டாஷ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெறிக்கு எதிராக கார் ஓட்டிய மூதாட்டி கைது செய்யப்பட்டார்
20 மே 2026, 2:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?



