கோலாலம்பூர், மார்ச் 10: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கேஎல்ஐஏ) ஓடுபாதை 3, திட்டமிடப்பட்டதை விட ஏழு நாட்களுக்கு முன்னதாகவே மீண்டும் முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மேம்படுத்தும் பணிகளுக்காக அந்த ஓடுபாதை பிப்ரவரி 24 முதல் 26 வரை முழுமையாக மூடப்பட்டது. பின்னர், மீதமுள்ள பணிகள் தொடர்ந்ததால், அது தற்காலிகமாக குறுகிய ஓடுபாதை உள்ளமைப்பில் இயங்கியது என கேஎல்ஐஏ விளக்கியுள்ளது.
“பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்ததால், இந்த ஓடுபாதை அதன் முழு நீளத்திற்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது,” என்று கேஎல்ஐஏ தனது அதிகாரப்பூர்வ X தளமான @KLIA_my கணக்கில் தெரிவித்துள்ளது.
மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் தரங்களை நிலைநிறுத்துவதற்கான கேஎல்ஐஏ-வின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மேம்படுத்தும் பணிகள் அமைந்ததாக அது மேலும் கூறியது.
முழுமையான செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான அசல் திட்டமிடப்பட்ட தேதி மார்ச் 17 ஆகும்.








