சிப்பாங், பிப் 10- முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட, குறிப்பாக அரசாங்க ஒதுக்கீட்டு நிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள சிப்பாங் நகராண்மைக் கழகம் தயாராக உள்ளது, இருப்பினும் இது மாநில அரசின் உத்தரவுக்கு உட்பட்டது.
மத வேறுபாடின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்ட எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் மீதும் உள்ளூராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்க அனுமதித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நடவடிக்கையை தாங்கள் ஆதரிப்பதாக சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் தலைவர் டாக்டர் அனி அஹ்மட் கூறினார்.
"பிரதமரின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஏனெனில், சில சமயங்களில் ஒதுக்கீட்டு நிலங்கள் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்காகத் தேவைப்படுகின்றன.
எனவே, நாங்கள் மாநில அரசின் உத்தரவுக்காகக் காத்திருப்போம். மாநில அரசு கேட்டுக்கொண்டால், நாங்கள் அதைச் செயல்படுத்துவோம். ஆம், நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்றார்.
காலியாகத் தோன்றும் இடங்களில் கூட, நிலப் பயன்பாடு மற்றும் மேம்பாட்டுத் திட்டமிடல் விதிகளுக்கு உட்பட்டிருப்பதால், வழிபாட்டுத் தலங்களை மனம்போன போக்கில் கட்ட முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
"காலியாகத் தெரிகிறது என்பதற்காக அவர்கள் விரும்பியபடி கட்ட முடியாது. அது விதிமுறைகளின்படி தவறு. சில இடங்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன, சுற்றியுள்ளவர்கள் சங்கடமாக உணர்கிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
எந்தவொரு பிரச்சினையும் ஒழுங்கான முறையில் தீர்க்கப்பட, சட்டப்பூர்வ செயல்முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்ட எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உண்டு என்று பிரதமர் வலியுறுத்தினார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில புத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ மதங்களுக்கான சிறப்புக் குழுவின் இணைத் தலைவர் வி. பப்பாராயுடு, 58 கோயில்கள் சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கையின் மூலம் இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கான நிலத்தில் வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.


