'பத்தாங் காலி கேர்' சமூக நலத் திட்டம் இந்த ஆண்டும் தொடரும்

10 மார்ச் 2026, 6:15 AM
'பத்தாங் காலி கேர்' சமூக நலத் திட்டம் இந்த ஆண்டும் தொடரும்

ஷா ஆலம், மார்ச் 10 – பத்தாங் காலி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வசதி குறைந்த நோயாளிகள் தடையின்றி மருத்துவச் சிகிச்சை பெறுவதை உறுதி செய்யும் நோக்கில், 'பாத்தாங் காலி கேர்' (Batang Kali Care) எனும் சமூக நலத் திட்டம் இந்த ஆண்டும் தொடரவுள்ளது.

மருத்துவமனைக்குச் செல்லப் போக்குவரத்து வசதி இல்லாத அல்லது நிதி நெருக்கடியில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிலாங்கூர் சமூக சுகாதாரத் தன்னார்வலர் அமைப்பான 'சுக்கா' (SUKA) உடன் இணைந்து இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாகத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைஃபுடின் ஷாபி முகமட் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவையின் கீழ், கோல குபு பாரு மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை மற்றும் செலாயாங் மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு வாரத்திற்கு மூன்று முறை போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும்.

இந்தச் சேவையைப் பெற விரும்பும் நோயாளிகள், இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே 'சுக்கா' குழுவினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முழுமையான செயல்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் 2026 முதல் தொடங்கவுள்ள நிலையில், இதில் தீவிர உடல்நலப் பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சைஃபுடின் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு பாதத்தின் ஒரு பகுதியை இழந்த அஸ்மான் ஹாசிம் எனும் 35 வயது நோயாளிக்கு, இத்திட்டத்தின் மூலம் உரியச் சிகிச்சை கிடைக்க 'சுக்கா' ஒருங்கிணைப்பாளர் ஃபத்துல் காரிப் உதவினார்.

இரண்டு குழந்தைகளைக் கொண்ட அஸ்மானின் மூத்த பிள்ளை மாற்றுத்திறனாளி (OKU) என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய இக்கட்டான நிலையில் உள்ள குடும்பங்களுக்கு இத்திட்டம் ஒரு பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில், இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய தன்னார்வலர்களுக்கான பதிவும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. சமூக சேவையில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, இதில் இணையும் தன்னார்வலர்களுக்கு ஒவ்வொரு சேவைக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 100 முதல் 150 மலேசிய ரிங்கிட் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்ளூர் மக்களிடையே தன்னார்வத் தொண்டு கலாச்சாரத்தை வலுப்படுத்தவும், அதிகமான நோயாளிகளுக்கு உதவவும் சைஃபுடின் ஷாபி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.