சண்டக்கான், மார்ச் 10- சண்டக்கான் பத்து 8 சந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி மன்ற (MPS) அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 14 வயது சிறுவன் உட்பட மூன்று பிலிப்பைன்ஸ் நாட்டு ஆடவர்களை போலீசார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
பத்து 8, கம்போங் பாரியாவா மற்றும் கம்போங் மலாயு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிபட்டதாக சண்டக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜார்ஜ் அப்துல் ரக்மான் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட மூவரும் அந்தச் சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அவர்கள் மீதான மேல் விசாரணை தற்போது தீவிரமாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது.சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் 186, 332 மற்றும் 147 ஆகிய பிரிவுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளனர்.முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று பத்து 8 சந்தைப் பகுதியில் சட்டவிரோத சிகரெட் விற்பனையாளரை எச்சரித்தபோது, அந்த அமலாக்க அதிகாரி ஒரு கும்பலால் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டதில் காயமடைந்தார்.சம்பவம் நடந்த அன்றே ஒரு நபர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு நிமிடத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த வன்முறை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




