ஷா ஆலாம், மார்ச் 9 - கிளாப் ஷா ஆலாமில் உள்ள டத்தாரான் சிலாங்கூரில் அமைக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பத்தில், சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் மாநிலக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார்.
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான 120 மீட்டர் கொண்ட இந்தக் கொடிக்கம்பத்திற்கான மலேசிய சாதனைகள் புத்தகத்தின் (Malaysia Book of Records) அங்கீகாரச் சான்றிதழை மாநில அரசுச் செயலாளர் டத்தோ டாக்டர் அகமட் பாட்லி அகமட் தஜுதீனிடம் சுல்தான் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
ஷா ஆலம் மாநகரின் புதிய அடையாளமாகவும், மாநிலத்தின் பெருமையின் சின்னமாகவும் விளங்கும் இந்த 120 மீட்டர் உயரமான கொடிக்கம்பம் கட்டி முடிக்கப்பட்டிருப்பது குறித்து சுல்தான் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இறைவனின் அருளால் சாத்தியமானது என்றும், சிலாங்கூர் வரலாற்றில் இது ஒரு புதிய மைல்கல் என்றும் சுல்தான் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்தக் கொடிக்கம்பம் சிலாங்கூர் மக்களின் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ வேண்டும் என்பதோடு, மாநிலத்தின் மீதான பற்றையும் கொடியின் மீதான மரியாதையையும் மக்களிடையே வளர்க்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என சுல்தான் தெரிவித்தார்.
ஷா ஆலம் நகரை நவீனமயமாக்கி, 1978-இல் அதனை மாநிலத் தலைநகராக அறிவித்த தனது தந்தை மறைந்த சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 8-ஆம் தேதியை இந்தத் திறப்பு விழாவிற்குத் தாம் தேர்ந்தெடுத்ததாகச் சுல்தான் விளக்கினார்.








