RON95 விலையைத் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் முயற்சி

9 மார்ச் 2026, 6:36 AM
RON95 விலையைத் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் முயற்சி

புத்ராஜெயா, மார்ச் 9 — மக்களுக்குச் சுமையாக இல்லாத வகையில் RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு RM1.99 ஆக பராமரிக்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று பிரதமரும் நிதியமைச்சருமான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

உலகளவில் எண்ணெயின் விலை உயர்ந்தாலும், நாட்டில் RON95 விலை கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.

“தற்போது எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

“BUDI 95 திட்டத்தின் கீழ், நாங்கள் இன்னும் RM1.99 விலையைப் பராமரித்து வருகிறோம். மக்களுக்குச் சுமையாக இருக்காத வகையில் அதைத் தொடரவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்று அவர் தெரிவித்தார்.

அவர் இன்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN) ஊழியர்களுடனான கூட்டத்தில் பேசுகையில் இதனை கூறினார்.

இந்நிகழ்வில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மற்ற நாடுகளை கைப்பற்றவோ அல்லது பிராந்தியத்தில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தவோ முயலும் எந்தவொரு வன்முறைச் செயல்களையும் மலேசியா ஏற்கவில்லை என்று அன்வார் தெரிவித்தார்.

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்கள் செலவினங்களைத் திட்டமிட்டு சிக்கனமாக வாழும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.