ஜெர்தே, மார்ச் 9: கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் கேமரன் ஹைலண்ட்ஸ் நோக்கிப் பயணித்தபோது காணாமல் போன பதின்ம வயது இளைஞர், கம்போங் பெத்திங் லிந்தாங், கம்போங் புக்கிட் ஜெருக் சாலை ஓரத்திலுள்ள புதரில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்படார்.
இன்று மாலை 6.40 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் ஒருவரின் சடலத்தை பொதுமக்கள் கண்டெடுத்ததை பெசுட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் ரோஸைம் அப் ரஹீம் பெர்னாமாவைத் உறுதிப்படுத்தினார்.
ஆரம்பகட்ட விசாரணையின்படி, கண்டெடுக்கப்பட்ட சடலம் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் குடும்பத்தினரால் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 19 வயதுடைய அகமட் அஸ்ரிக் ஸப்ரின் அகமட் அஸ்ஹார் என்பது நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இளைஞர் பயணித்த யமஹா ஆர்15 (Yamaha R15) ரக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அவர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்திருக்கக்கூடும் என்று காவல்துறை கருதுகிறது.
சடலம் அடையாளம் காணப்படுவதற்காகவும் மற்றும் பிரேதப் பரிசோதனைக்காகவும் பெசுட் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கம்போங் பாத்தின், செபராங் தாக்கீர் பகுதியிலிருந்து தனது குடும்பத்தினருடன் கேமரன் ஹைலண்ட்ஸிற்குச் சுற்றுலாச் சென்றபோது அகமட் அஸ்ரிக் மாயமானார்.
அவரது குடும்பத்தினர் காரில் செல்ல, அவர் மட்டும் தனியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் கடைசியாகக் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.38 மணியளவில் கம்போங் பெத்திங் லிந்தாங்கில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் இருந்ததை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் உறுதிப்படுத்தின.








