கோலாலம்பூர்: சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், தேசிய மகளிர் இரட்டையர் வீராங்கனைகளான பெர்லி தான்-எம்.தீனா, தென்கொரியாவின் பேக் ஹா நா-லீ சோ ஹீ இணையிடம் தோல்வியுற்றனர்.
உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர்களான பெர்லி-தீனா, 17-21, 18-21 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினர். பர்மிங்காம் யுடிலிட்டி அரங்கில் இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.முதல் செட்டை பெர்லி-தீனா 2-0 என முன்னிலையுடன் சிறப்பாகத் தொடங்கினர். இருப்பினும், உலகின் நான்காம் நிலை ஆட்டக்காரர்களான ஹா நா-சோ ஹீ இணை மீண்டும் எழுச்சி பெற்று, முதல் செட்டை 21-17 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினர்.
இரண்டாவது செட்டிலும் பெர்லி-தீனா ஆக்ரோஷமாக விளையாடி 10-7 என முன்னிலை பெற்றனர். ஆனால், தென்கொரிய இணை மீண்டும் சிறப்பாக விளையாடி 21-18 என அந்த செட்டையும் வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
2022-ஆம் ஆண்டிலிருந்து ஹா நா-சோ ஹீ இணைக்கு எதிராக மோதிய ஏழு ஆட்டங்களில் பெர்லி-தீனாவின் நான்காவது தோல்வி இது. இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் நம்பிக்கை தொடர்கிறது. ஆரோன் சியா-சோ வூ யிக் இணை அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் சென் போ யாங்-லியு யி இணையைச் சந்திக்கவுள்ளது.








