கோலாலம்பூர், மார்ச் 9: 2026-ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து பூப்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், மலேசியாவின் முன்னணி இணையான ஆரோன் சியா - சோ வூய் யிக் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினர். இதன் மூலம், இத்தொடரில் மலேசியா 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் வெற்றிப் போராட்டத்திற்கு இந்த முறையும் தீர்வு கிடைக்காமல் போனது.
பர்மிங்காமில் உள்ள யூட்டிலிட்டா அரேனாவில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில், உலகின் இரண்டாம் நிலை ஜோடியான ஆரோன்-வூய் யிக், நடப்பு சாம்பியன்களான தென்கொரியாவின் கிம் வோன் ஹோ - சியோ சியுங் ஜே இணையிடம் 21-18, 12-21, 21-19 என்ற கணக்கில் தோற்றனர்.
உலகின் முதல் நிலை ஜோடியான வோன் ஹோ - சியுங் ஜே, முதல் ஆட்டத்தில் 18-21 என இழந்த போதிலும், பின்னர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டு வந்தனர். இரண்டாவது ஆட்டத்தில் 21-12 என எளிதாகக் கைப்பற்றிய அவர்கள், 63 நிமிடங்கள் நீடித்த இந்தப் போராட்டத்தை 21-19 என வெற்றிகரமாக முடித்து மலேசிய ஜோடியின் கனவைத் தகர்த்தனர்.
2019 மற்றும் 2024-ஆம் ஆண்டு பதிப்புகளின் இறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆரோன்-வூய் யிக், இந்த ஆண்டும் மிக முக்கியமான இப்பட்டத்தை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டனர். சூப்பர் 1000 அந்தஸ்து கொண்ட இத்தொடரில், மலேசியா கடைசியாக 2007-ஆம் ஆண்டு கூ கியன் கீட் - டான் பூன் ஹியோங் ஜோடி மூலம் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற தென்கொரிய ஜோடிக்கு 107,300 அமெரிக்க டாலர் (RM423,466) பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது, இரண்டாம் இடம் பிடித்த ஆரோன்-வூய் யிக் இணையினருக்கு 50,750 அமெரிக்க டாலர் (RM200,288) பரிசாகக் கிடைத்தது.





