கோலாலம்பூர், மார்ச் 7-ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் 18 வயதுக்குட்பட்ட பதின்ம வயது சிறுவர்கள் ஆவர்.
கடந்த பிப்ரவரி 14, 15ஆம் தேதிகளில் நாட்டின் பல பகுதிகளில் காவல்துறை சிறப்புப் பிரிவு நடத்திய அதிரடி நடவடிக்கைகளின்போது இவர்கள் பிடிபட்டனர் அரச மலேசிய காவல்துறைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.
16 முதல் 21 வயதுக்குட்பட்ட இந்த சந்தேக நபர்கள், கிள்ளான் பள்ளத்தாக்கு, கெடா, ஜோகூர் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
இவர்கள் இணையம் வழியாகத் தீவிரவாத சித்தாந்தங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐ.எஸ். தலைவர்களுக்கு விசுவாச உறுதிமொழி எடுத்ததுடன், காவல் நிலையங்கள், முக்கிய அரசாங்கக் கட்டடங்கள் மற்றும் பொது இடங்கள் மீது தாக்குதல் நடத்தவும் இந்த சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்தது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும், தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்புவது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, பிரச்சாரப் பொருட்களைப் பகிர்வது போன்ற நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக இளைஞர்கள், பதின்ம வயதினர், மற்றும் சிறுவர்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாக காவல்துறைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.







