ஷா ஆலம், மார்ச் 5: பல்கலைக்கழக மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதோடு அறிவை நேசிக்கும் பண்பை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆண்டும் உள்ளூர் மாணவர்களுக்குப் புத்தக வவுச்சர்களை மாநில அரசு தொடர்ந்து வழங்கும்.
கடந்த ஆண்டு 4,000 மாணவர்களை இலக்காகக் கொண்ட இந்த திட்டம், இவ்வாண்டு RM2 மில்லியன் ஒதுக்கீட்டில் 10,000 மாணவர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்ப்பதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“ஒவ்வொரு மாணவரும் RM200 மதிப்புள்ள புத்தக வவுச்சரைப் பெறுவார்கள்,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்த திட்டம் அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் முக்கியமான மனித மூலதன முதலீடாகும். இது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான முக்கிய திறவுகோலாகவும் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
மேலும், அச்சு வடிவில் உள்ள புத்தகங்களை வாசிப்பது மாணவர்களின் கவனத்தை அதிகரிக்கவும், அறிவைப் பற்றிய ஆர்வத்தை மேலும் வலுப்படுத்தவும் உதவுகிறது என்றார்.








