கோலாலம்பூர், மார்ச் 5- தேசிய ஒற்றுமை அமைச்சு (KPN), பல்லின சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் மத ரீதியான உணர்வுப்பூர்வமான விவகாரங்களைக் கையாள்வதில் தொடர்ந்து மத்தியஸ்தராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் என அதன் துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மத விவகாரங்கள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவும், குறிப்பாக அந்தந்த சமூகங்களுக்கான வக்ஃப் வாரியங்களை அமைப்பது போன்ற திட்டங்கள் மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அவர் விளக்கமளித்தார்.
மத விவகாரங்களில் மாநிலங்களின் இறையாண்மையை மத்திய அரசு மதிப்பதாகவும், பினாங்கு மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டது போன்ற வாரியங்களை அமைக்க விரும்பும் மாநிலங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தமட்டில், அவற்றின் கட்டுமானம் மற்றும் சட்ட இணக்கங்கள் அனைத்தும் உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு (KPKT) மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
நிதியுதவி மேலாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி மேலாண்மை 'e-RIBI' எனும் டிஜிட்டல் முறையின் மூலம் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் கூறினார்.
பல்வேறு மதத் தலைவர்களைக் கொண்ட 'JK HARMONI' குழு, மத ரீதியான பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஆலோசனைகளை வழங்கவும் ஒரு முக்கிய தளமாக விளங்கும் என்று அவர் நேற்று மேலவையில் தெரிவித்தார்.







