மணிலா, மார்ச் 3: இன்று காலை, மணிலாவிலிருந்து தென்கிழக்கே சுமார் இரண்டு மணி நேரம் தொலைவில் உள்ள ரிசால் மாகாணத்தின் பிலில்லாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், மலேசியர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் இறந்த மற்றொருவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
காலை 7.27 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், இரண்டு மலேசியர்கள் உட்பட ஐந்து நபர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள புல்வெளிப் பகுதியில் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இரண்டு பயணிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டதாக ரிசால் மாகாண காவல்துறை அதிகாரி ராம்ஜே பங்கா தெரிவித்தார். விமானி பலத்த காயமடைந்ததாகவும், மற்ற இருவர் உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
உயிர் பிழைத்த மூவரும், குறிப்பாக விமானி இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாக பிலில்லா மேயர் ஜான் மாசின்சின் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு காயம் ஏற்படாமல், குடியிருப்புப் பகுதியில் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய விமானியின் விரைவான நடவடிக்கையை அவர் பாராட்டினார்.
ஹெலிகாப்டரின் இயந்திரம் கிட்டத்தட்ட முழுமையாகப் பழுதடைந்த நிலையில் அவசரமாகத் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகப் பங்கா தெரிவித்தார். பிலிப்பைன்ஸ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
– ஏஜென்சி








