பந்திங், மார்ச் 2 – நேற்று தேசிய வகை ஜெஞ்சாரோம் சீனப்பள்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பந்திங் தொகுதி அளவிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல இன மக்கள் கலந்து கொண்டனர்.
மாலை 7.30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்விற்குத் தனது குடும்பத்தாருடன் மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார். நகராட்சி மன்ற உறுப்பினர்களும் கிராமத் தலைவர்களும் அவரை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சீனப் புத்தாண்டு வாழ்த்து உரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நகராட்சி மன்ற உறுப்பினர்களும் கிராமத் தலைவர்களும் தங்களது சுருக்கமான வாழ்த்து உரைகளை வழங்கினர். இறுதியாக, சிறப்புரை வழங்கி இந்நிகழ்வை பாப்பாராய்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்த கொண்டாட்டத்தில் வருகையாளர்களுக்குப் பல்வேறு உணவு வகைகள் வழங்கப்பட்டதோடு, கலாச்சார நடனங்கள், அங்பாவ் வழங்குதல், அதிர்ஷ்டக் குழுக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதற்கிடையில், இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாகப் பள்ளியில் புறப்பாட நடவடிக்கையில் சிறந்து விளங்கிய சுமார் 56 மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும் ஜெஞ்சாரோம் சீனப்பள்ளி மற்றும் ஜெஞ்சாரோம், மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.








