ஷா ஆலம், மார்ச் 1 - உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங்கில் உள்ள ஒரு மளிகைக் கடையின் முன்பு அமர்ந்து கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த பெண்ணை குறிவைத்து, வழிப்பறி செய்ய முயற்சி நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து இரவு 9 மணியளவில் தனது துறைக்குப் புகார் கிடைத்ததாகக் உலு சிலாங்கூர் மாவட்டக் காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் இப்ராஹிம் ஹுசின் கூறினார்.
ஹெல்மெட் மற்றும் கருப்பு ஜாக்கெட் அணிந்திருந்த சந்தேக நபர் தனது நகையைப் பறிக்க முயற்சி செய்ததாகப் பாதிக்கப்பட்டவர் கூறினார்.
அந்நபர் பின்னாலிருந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை இழுத்துள்ளான். அதில் அந்த சங்கிலியுடன் 3 தங்க நிற லாக்கெட்டுகள் தரையில் விழுந்தன.
உடனடியாக, அவன் கருப்பு Yamaha Y15ZR மோட்டார் சைக்கிளில் காத்திருந்த மற்றொரு நபருடன் அங்கிருந்து தப்பிச் சென்றான். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த காயமும், பொருள் இழப்பும் ஏற்படவில்லை.
தற்போது காவல்துறையினர் சந்தேக நபர்களைத் தேடி வருவதாக இப்ராஹிம் ஹுசின் தெரிவித்தார்.
தகவல் தெரிந்தவர்கள், உலு சிலாங்கூர் காவல்துறை தலைமையகத்தை அல்லது அருகிலுள்ள காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.








