ஷா ஆலம், பிப் 27- ஷா ஆலம் பிரிவு 14-இல் அமைந்துள்ள அனேகா வாக்கில், பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் வசதிக்காக மஃரிப், இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த ஆன்மீக நிகழ்வில் பங்கேற்கும் பிகேஎன்எஸ் வளாகம் மற்றும் எஸ்ஏசிசி மால் வருகையாளர்களுக்கு 'மோரே' எனப்படும் இரவுச் சிற்றுண்டியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஏ சென்ட்ரல் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகப், பிகேஎன்எஸ் மற்றும் எஸ்ஏசிசி மாலுக்கு இடையிலான நடைபாதையைப் புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில் 300 மீட்டர் நீளத்தில் இந்த அனேகா வாக் கலாச்சார மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ முகமட் நஜிப் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் சுமார் 3,000 பார்வையாளர்களை வரவேற்கும் திறன் கொண்ட இந்த நவீன தளம், இன்னும் ஆயத்தக் கட்டத்தில் இருந்தாலும் பொதுமக்களின் நலன் கருதி இந்த ரமலான் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
ஜனவரி 30 முதல் மார்ச் 20 வரை நடைபெறும் 12-வது ஆண்டின் 'சிலாங்கூர் ரமலான் பெருவிழா 2026' (FESTIRA), மூன்று மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் இலக்குடன் அனேகா வாக் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது.
1,000-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட விழாவானது ஷா ஆலம் மற்றும் பங்கி பிகேஎன்எஸ் வளாகங்களிலும் உற்சாகமாக நடைபெற்று வருவதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.








