ரவூப், பிப் 26 – இங்குள்ள கம்போங் பாமா கூலாட் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 3.35 மணியளவில் இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக ரவூப் மாவட்ட காவல்துறை தலைவர், கண்காணிப்பாளர் முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். "தீயணைப்புப் படையினர் தீயை முழுமையாக அணைத்தப் பிறகு, சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட ஐவரின் உடல்களையும் கண்டெடுத்தோம்," என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தொடர்பு கொண்டபோது கூறினார்.
பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக ரவூப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் என்று அவர் மேலும் கூறினார். இதற்கிடையில், பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் டத்தோ முகமட் ரசாம் தஜா ரஹிம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், அதிகாலை 4.15 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், தீயை அணைக்கும் பணி அதிகாலை 4.48 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இப்பணியில், ரவூப் தீயணைப்பு நிலையத்திலிருந்து இரண்டு தீயணைப்பு வண்டிகள் (FRT) மற்றும் ஒரு அவசரகால மருத்துவ மீட்பு சேவை (EMRS) பிரிவு உட்பட ஒன்பது உறுப்பினர்களும், லிப்பிஸ் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு FRT வண்டியுடன் ஐந்து உறுப்பினர்களும் உதவிக்கு வந்தனர்.








