தங்காக், பிப் 24- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 170.1 கிலோமீட்டரில் (வடக்கு திசை) அவசரகாலப் பாதையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் அதிகாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், அதன் ஓட்டுநர் நேற்று உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் 2.07 மணியளவில் தங்காக் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக தங்காக் மாவட்டப் போலீஸ் தலைவர், கண்காணிப்பாளர் ரோஸ்லான் முகமட் தாலிப் கூறினார்.
நீல நிற சுசுகி DL650XA வகை மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 38 வயதுடைய நபர், நெடுஞ்சாலையின் அவசரகாலப் பாதையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை மோதியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
"இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இருவரும் ஜாசின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்குக் கால், கை மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்," என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகவும், சம்பவம் குறித்து பொதுமக்கள் எவ்வித ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் ரோஸ்லான் எச்சரித்தார்.
"இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், விசாரணைக்கு உதவ, வழக்கு விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் அஸ்மில் அஸ்வா அமீர் அஸ்வாவை 019-3058346 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்," என்றார்.








