கோலாலம்பூர், பிப் 24: நாட்டில் பதிவு செய்யப்படாதக் கோவில்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க, கோவில்களை நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை தேசிய இந்து கோவில் வழிநடத்தல் குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
பிப்ரவரி 21 அன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலேசிய இந்து சங்கம் (MHS) தலைமையகத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அக்குழு தெரிவித்ததாவது, தங்களின் பொறுப்பு கோயில்களை சீரற்ற முறையில் பதிவு செய்வதில் அல்ல; மாறாக, சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையை பெறுவதற்கான ஒழுங்குபடுத்தல் மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளில் கோவில்களுக்கு உதவுவதே நோக்கம் ஆகும்.
இந்த வகைப்படுத்தலில்:
பச்சை நிறம்: முழுமையான ஆவணங்கள் கொண்ட, அரசு பதிவேட்டில் (gazette) இடம்பெற்ற கோவில்கள்
மஞ்சள் நிறம்: முழுமையான நில உரிமை ஆவணங்களைப் பெறாத மற்றும் gazette செய்யப்படாத கோவில்கள்
ஆரஞ்சு நிறம்: அரசு அல்லது தோட்ட நிலத்தில் உள்ள அனுமதி பெற்ற கோவில்கள்
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வகைகளில் உள்ள பதிவுசெய்யப்படாத கோவில்களுக்கு நிலம் வாங்குதல் அல்லது RIBI நிலத்தைப் பெற்றுத் தருதல் போன்ற வழிகள் ஆராயப்படும்.
சிவப்பு நிறம்: எந்த ஆவணமும் இல்லாத, பதிவுசெய்யப்படாத அல்லது நில உரிமையாளர்களுடன் ஒப்பந்தமில்லாத கோவில்கள். இத்தகைய கோவில்களைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட கோயில்களுடன் இணைக்கும் பரிந்துரையும் இக்குழு முன்வைக்கிறது.
அதுமட்டுமில்லாமல், பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தி, கோவில்களின் நிலையை சரிசெய்ய ஒத்துழைப்பை பெறவும் இக்குழு திட்டமிட்டுள்ளது.








