ஷா ஆலம், பிப் 22 : பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, குறிப்பாக 300 கிலோமீட்டருக்கும் அதிகமான நீண்ட தூரப் பயணங்களுக்கு, பேருந்து சோதனைகள் மற்றும் பாதுகாப்பு அமலாக்கத்தை சிலாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) கடுமையாக்குகிறது.
தினசரி செயல்பாட்டில் ஓட்டுநர்கள் மற்றும் வாகனத்தின் தொழில்நுட்ப அம்சங்களான டயர்கள், பிரேக்குகள் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
"300 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் கொண்ட பயணங்களில், ஓட்டுநர் சோர்வடைவதைத் தடுக்க 2 பேருந்து ஓட்டுநர்கள் தேவை" என்று முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஷா ஆலம், பிரிவு 17 பேருந்து முனையம் மற்றும் காஜாங், ஜாலான் ரெக்கோ பேருந்து முனையம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும்.
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பான பேருந்து பயணங்களை உறுதி செய்தல் மற்றும் நிலப் போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை என்று சிலாங்கூர் ஜேபிஜே வலியுறுத்தியது.
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான தகவல்களைக் கொண்ட அல்லது புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள், aduantrafik@jpj.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது e-aduan@JPJ விண்ணப்பதளம் வழியாக புகார்களை சிலாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறைக்கு அனுப்பலாம்,.








