ஷா ஆலம், பிப் 20: காஜாங் மாவட்டத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவருக்குச் சொந்தமான கிரிப்டோ கரன்சி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உதவ 12 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து, கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி மதியம் 2.06 மணியளவில் போலீசாருக்குப் புகார் வந்ததாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
"அந்தப் புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கையில், விசாரணைக்கு உதவும் வகையில் 12 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது தண்டனைச் சட்டம் பிரிவு 395/397-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரி அல்லது காவலர் மீதும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்று டத்தோ ஷாசெலி உறுதிபடத் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் போலீசார் முழுமையான விசாரணையை மேற்கொள்ளப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், விசாரணை செயல்முறையைப் பாதிக்கும் வகையில் எவ்வித ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


