கோலாலம்பூர், பிப் 19 - புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைப்பதற்கான மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளில் புகையிலை மீதான கலால் வரியை உயர்த்துவதும், 'எண்ட்கேம் 2045' (Endgame 2045) இலக்கை அடைவதற்கு விரிவான அமலாக்கத்தை மேற்கொள்வதும் அடங்கும் என்று மலேசியப் புகையிலைக் கட்டுப்பாட்டு மன்றம் (எம்.சி.டி.சி) தெரிவித்துள்ளது.
பொது சுகாதாரக் கொள்கையின் மிகச் சிறந்த கருவிகளில் வரி உயர்வும் ஒன்றாகும், குறிப்பாக விலை உயர்வுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுவினர் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்க இது உதவும் என எம்.சி.டி.சி-யின் தலைவர், பேராசிரியர் டாக்டர் எம். முரளிதரன் கூறினார்.
"இருப்பினும், விலை உயர்வு உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தவும், சட்டவிரோத சந்தையால் கையாளப்படாமல் இருக்கவும், விரிவான மற்றும் ஒருங்கிணைந்த அமலாக்கம் அதன் செயல்பாட்டின் முக்கிய அடித்தளமாக இருக்க வேண்டும்," என அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
இந்த நிதிசார்ந்த நடவடிக்கை, மலேசியா 2003 செப்டம்பர் 23இல் கையெழுத்திட்டு, 2005 செப்டம்பர் 16இல் அங்கீகரித்த உலக சுகாதார அமைப்பின் புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான கட்டமைப்பு உடன்படிக்கைக்கு (FCTC) இணங்குவதாகவும் அவர் கூறினார்.
வரி விதிப்பின் மூலம் விலையை உயர்த்துவது, இளம் வயதினர் புகைப்பிடிக்கத் தொடங்கும் விகிதத்தைக் குறைப்பதாகவும், தற்போது புகைப்பவர்களைப் அப்பழக்கத்தை நிறுத்த ஊக்குவிப்பதாகவும், அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே பயன்பாட்டைக் குறைப்பதாகவும் பல்வேறு உலகளாவிய ஆய்வுகள் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2015ஆம் ஆண்டிலிருந்து புகையிலைப் பொருட்களுக்கான வரி உயர்த்தப்படவில்லை என்பதை எம்.சி.டி.சி நினைவூட்டியது. எனவே, 2045ஆம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்கும் பொருட்களை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை அடைய இந்த நிதிசார்ந்த கொள்கையை மறுஆய்வு செய்வது அவசரத் தேவையாகும்.
வரி உயர்வு கடத்தலை அதிகரிக்கும் என்ற கவலையைப் பற்றி குறிப்பிட்ட முரளிதரன், உலக வங்கியின் 'சட்டவிரோத புகையிலை வர்த்தகத்தை எதிர்கொள்ளுதல்: நாடுகளின் அனுபவங்கள் குறித்த உலகளாவிய ஆய்வு' என்ற தலைப்பிலான அறிக்கை, சட்டவிரோத வர்த்தகமானது வரி விகிதங்களை விட, பலவீனமான அமலாக்கம் மற்றும் நிர்வாகத்துடன் அதிகம் தொடர்புடையது என்பதைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக, உரிமம் வழங்கும் வழிமுறைகள், கண்காணிப்பு மற்றும் தடம் அறியும் அமைப்புகள், மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பை வலுப்படுத்த, FCTC-யின் 15-ஆவது பிரிவின்படி 'புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத வர்த்தகத்தை ஒழிப்பதற்கான நெறிமுறையை' அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்று எம்.சி.டி.சி வலியுறுத்துகிறது.


