ஷா ஆலம், செப். 19 - கடந்தாண்டு நாடு முழுவதும் உள்ள உணவு வளாகங்களில் சுகாதார அமைச்சு நடத்திய சோதனைகளின்போது புகைபிடித்த குற்றங்களுக்காக 101,521 பேருக்கு மொத்தம் 1 கோடியே 14 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் சுகாதார அமைச்சின் ஆய்வு மற்றும் சட்டத் துறை மொத்தம் 19,175 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையானது பல்வேறு உணவு
வளாகங்களில் நாளொன்றுக்கு 50க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொள்வதற்கு சமமமானதாகும் என அவர் சொன்னார்.
ஷா ஆலமில் @SyedAkramin என்பவரால் ட்வீட் செய்யப்பட்ட உணவகத்தில் புகைபிடித்தல் தொடராபான சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இது உணவுச் சட்டத்தின் (சட்டம் 281) கீழ் புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு மாற்றாக விளங்கும் 852வது சட்டத்தின் 16(2)வது பிரிவின் கீழ் அப்பட்டமான குற்றமாகும்.
ஆகவே, சட்டம் முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்வதற்காக சுகாதார அமைச்சு கடந்த 12 மாதங்களில் பல அமலாக்க நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது என்று அவர் அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறினார்.
உணவு வளாகம் உள்பட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகைபிடிக்கும் வாடிக்கையாளர்களை கண்டிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொறுப்பு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், புகைபிடித்தல் தடை விதிமுறைகள் உட்பட தொடர்புடைய சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் ஊராட்சிமன்ற அதிகாரிகள் மற்றும் சமூகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 11ஆம் தேதி ஷா ஆலம், செக்சன் 7இல் உள்ள ஒரு உணவகத்தில் புகைபிடித்ததற்காக கண்டித்த நபரிடம் ஆடவர் ஒருவர் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதைக் காட்டும் வீடியோ வைரலானது.
உணவகங்களில் புகைபிடித்த குற்றத்திற்காக கடந்தாண்டு வெ.1.1 கோடி அபராதம் வசூல்
19 செப்டெம்பர் 2025, 3:32 AM