ஷா ஆலம், செப். 18 - உணவகம் ஒன்றில் கர்ப்பிணிப் பெண்ணின் அருகில் புகைபிடித்ததற்காகக் கண்டித்த அப்பெண்ணின் கணவருடன் சண்டையிட்டதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்திற்கான மோட்டார் சைக்கிள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிது நேரத்தில் 49 வயதுடைய அந்த நபர் இங்குள்ள செக்சன் 9 பகுதியில் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்டக் காவல்துறை தலைவர் உதவி ஆணையர் முகமது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
கைதான நபரை நாங்கள் காவலில் வைக்க நாங்கள் விண்ணப்பிப்போம் என்று அவர் கூறியதாக தி ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மெக்கானிக்காக பணிபுரியும் சந்தேக நபருக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்றும் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் இல்லை என்றும் கண்டறியப்பட்டதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, ஒரு உணவகத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் அருகில் ஒரு ஆடவர் புகைபிடித்ததைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதை சித்தரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி செக்சன் 13 இல் நிகழ்ந்த இச்சம்பவத்தை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரபபட்டது.
சந்தேக நபர் உணவகத்தில் புகைபிடித்தபோது தனது உடல்நலம் மற்றும் குழந்தையின் உடல்நலம் குறித்து கவலைப்பட்ட அந்த கர்ப்பிணியும் அவரின் கணவரும் அந்நபரிடம் புகைப்பதை நிறுத்தச் சொன்னார்கள்.
ஆனால், அந்த நபர் எச்சரிக்கையை புறக்கணித்தார் என்று அவர் கூறினார். சந்தேக நபர் மறுபடியும் அவர்களை நோக்கி சிகரெட் புகையை ஊதினார். இதனால் சண்டை மூண்டது அவர் கூறினார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக முகமது இக்பால் கூறினார்.