கோலாலம்பூர், பிப். 13 - உலகளாவிய சூழல் தொடர்ந்து சவாலாக இருந்தபோதிலும், அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் RM3.89-ஆக வலுவடைந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத இந்த உச்சகட்ட வளர்ச்சி, நாட்டின் பொருளாதார அடிப்படைகள் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதிலும், சீரான மற்றும் முறையான பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துவதிலும் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமையின் செயல்திறனை இந்தச் சிறப்பான செயல்பாடு எடுத்துக்காட்டுவதாகப் பிரதமரின் அரசியல் செயலாளர், அஹ்மட் ஃபர்ஹான் ஃபௌசி கூறினார்.
நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துதல், விரயங்களைத் தடுத்தல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் முதலீட்டுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கியுள்ளன. இது அந்நிய மூலதனம் நாட்டிற்குள் வருவதை ஆதரித்து, நாட்டின் நாணய மதிப்பை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
அதிகமான பன்னாட்டு நிறுவனங்கள் மலேசியாவை முதலீட்டு மையமாகத் தேர்ந்தெடுக்கும்போது, அதன் பொருளாதாரப் பலன்களை இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் உட்பட உள்ளூர் மக்கள் உணர்வார்கள் என்று அஹ்மட் ஃபர்ஹான் கூறினார்.
ரிங்கிட் வலுப்பெறுவது வாழ்க்கைச் செலவினத்திலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை குறைவதன் மூலம், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ரிங்கிட் வலுப்பெறுவது என்பது அந்நியச் செலாவணி சந்தையில் வெறும் எண்களின் மாற்றம் மட்டுமல்ல, மாறாக, மலேசியாவின் பொருளாதார வாய்ப்புகள் மீதான நம்பிக்கையின் மீட்சியையும் இது காட்டுகிறது என்று அஹ்மட் ஃபர்ஹான் கூறினார்.
"சீரான, வெளிப்படையான மற்றும் நேர்மையுடன் செயல்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகள், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்து மக்களுக்கு நேரடிப் பலன்களைக் கொண்டுவரும் திறன் கொண்டவை," என்று அவர் மேலும் கூறினார்.
- பெர்னாமா
ரிங்கிட் வலுவடைந்தது நாட்டின் பொருளாதார மீதான நம்பிக்கையின் அறிகுறி
13 பிப்ரவரி 2026, 8:28 AM


