தேசிய இணையப் பாதுகாப்புத் திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் - பிரதமர்

13 பிப்ரவரி 2026, 1:55 AM
தேசிய இணையப் பாதுகாப்புத் திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் - பிரதமர்

கோலாலம்பூர், பிப் 13: நிலைகுலைந்து வரும் உலக அரசியல் சூழ்நிலையுடன் இணைந்து, நாட்டின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் இறையாண்மையை உறுதி செய்ய அனைத்து பங்குதாரர்களின் மூலோபாய ஒத்துழைப்பின் மூலம் தேசிய இணையப் பாதுகாப்புத் (சைபர் பாதுகாப்பு) திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் சிக்கலான இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாட்டின் தயார்நிலையை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்தத் திட்டம் தேசிய இணையப் பாதுகாப்புக் குழு (JKSN) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்

“அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் படி, மலேசிய குறியியல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை மையம் (PTPKM) மற்றும் சைபர் பாதுகாப்பு மலேசியா (CSM) ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மைய அமைப்பாக சைபர் பாதுகாப்பு மற்றும் குறியியல் மேம்பாட்டு மையம் (CSCDC) அமைப்பதில் உள்ள  முன்னேற்றத்தையும் கூட்டம் ஆய்வு செய்தது,” என்றார்.

இந்த மறுசீரமைப்பின் மூலம், PTPKM நிரந்தர நிறுவன அந்தஸ்தைப் பெறும். அதேவேளை CSM இன் செயல்பாடுகள் மற்றும் வளங்கள் அனைத்தும் CSCDC கீழ் மையப்படுத்தப்படுவதோடு அது பிரதமர் துறையில் அமைக்கப்பட்டு NACSA மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மேற்பார்வையில் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு பிரிவாக இயங்கும்,” என்று அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.

சைபர் குற்ற மசோதாவிற்கான முன்மொழியப்பட்ட புதிய கொள்கைக்கும் கூட்டம் ஒப்புதல் அளித்ததாக அன்வார் கூறினார். இதில் செயற்கை நுண்ணறிவு (AI) தவறாகப் பயன்படுத்தப்படுவதை நிவர்த்தி செய்வதற்கான விதிகள் அடங்கும். அதாவது டீப்ஃபேக் (deepfake), நெருக்கமான படங்களைப் பரப்புதல் மற்றும் விசாரணை நோக்கங்களுக்காக கணினித் தரவைத் தக்கவைத்துக்கொள்வது போன்ற அம்சங்கள் அடங்கும்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.