வான்கூவர், பிப் 11 — மேற்கு கனடாவில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் நேற்று பெண் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிதாரி உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பெண் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. கனடாவின் அண்மைக்கால வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சம்பவம், பொதுவாக அண்டை நாடான அமெரிக்காவில் நடக்கும் வன்முறை கலாச்சாரம் தற்போது கனடாவிற்கும் பரவியுள்ளதைக் காட்டுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆறு பேர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். மேலும் இருவர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு குடியிருப்பில் உயிரிழந்து கிடந்தனர். மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த குறைந்தது 25 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில், இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர் ஒரு பெண் என்று காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. வட அமெரிக்காவில் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும்பாலும் ஆண்களாலேயே நடத்தப்படும் நிலையில், ஒரு பெண் இதில் ஈடுபட்டிருப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பழுப்பு நிற முடி கொண்ட, ஆடை அணிந்த ஒரு பெண் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பள்ளியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவரும் அவரே என்பதை காவல்துறை கண்காணிப்பாளர் கென் ஃபிலாய்ட் உறுதிப்படுத்தினார். உயிரிழந்தவர்களில் மாணவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்களைப் போலீஸார் இன்னும் வெளியிடவில்லை


