புத்ராஜெயா, பிப் 11 - எதிர்வரும் 2033ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை ஊழல் புலனாய்வுக் குறியீட்டில் (சிபிஐ) முதல் 25 நாடுகளுக்குள் கொண்டுவரும் இலக்கை அடைய, சீர்திருத்த முயற்சிகள் வெறும் கொள்கை அளவிலான முடிவுகளாகவோ அல்லது ஒப்புதல்களாகவோ இல்லாமல், நம்பகமான மற்றும் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளாக இருக்க வேண்டும் என அமலாக்க நிறுவன ஒருமைப்பாட்டு ஆணையம் (EAIC) தெரிவித்துள்ளது.
சிபிஐ-இன் சமீபத்திய வளர்ச்சியில் மலேசியா 52 புள்ளிகளுடன் உலகில் 54-வது இடத்தைப் பிடித்திருப்பதை வரவேற்கத்தக்கது என அமலாக்க நிறுவன ஒருமைப்பாட்டு ஆணையம் குறிப்பிட்டது.
மேலும், சிபிஐ தரவரிசையை மேம்படுத்தும் இலக்கிற்கு ஏற்ப, நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதான தீவிர அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் ஊழல் மீதான பொதுமக்களின் கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டும் என்று அந்த ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
"ஊழல் மற்றும் முறைகேடுகள் மீதான கண்ணோட்டமும் கதையாடலும் நாட்டைக் கொள்ளையடிக்கும் செயலாகப் பார்க்கப்பட வேண்டும். இது, வேரூன்றிய தவறுகளைத் தடுப்பதற்கு ஒவ்வொரு பொது ஊழியரும் உடனடியாகவும் தைரியமாகவும் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது," என்று EAIC வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சூழலில், அதிகாரிகளும் துறைத் தலைவர்களும் மேலும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் மற்றும் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆணையம் கூறியது.
ஒழுங்குமுறைப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது மற்றும் ஊழல் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வது போன்றவை நிறுவனங்களின் ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புடைமையை நிலைநிறுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளாகும்.
"மலேசிய ஒம்புட்ஸ்மேன் (Ombudsman) நிறுவுதல் உட்பட, நிறுவன மற்றும் சட்ட சீர்திருத்தங்களை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா வலியுறுத்துவதை EAIC வரவேற்கிறது. இத்திட்டங்கள் எந்தவிதமான ஓட்டைகளும் இன்றி கவனமாகத் திட்டமிடப்பட்டு, திறம்படச் செயல்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அமைப்புகளை விட அதிக பலன்களை வழங்க வேண்டும்," என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்க நிறுவனங்களின் ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புடைமையை வலுப்படுத்தத் தேவையான முயற்சிகளையும் வழிமுறைகளையும் ஆணையம் தொடர்ந்து செயல்படுத்தும்.
"உறுதியான நடவடிக்கைகள் மற்றும் வலுவான நிர்வாகத்தின் மீதான அர்ப்பணிப்பின் மூலம், மலேசியா சிபிஐ-இல் முதல் 25 இடங்களுக்குள் இடம்பெறும் இலக்கை அடைவதுடன், நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த முடியும்," என்று EAIC நம்பிக்கை தெரிவித்தது.


