கிள்ளான், பிப் 10- 2025 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநிலத்திற்கு வருகை தரும் ஆண்டாக மாநில அரசாங்கம் திட்டங்களை வகுத்தது. இதன் வாயிலாக கடந்த ஆண்டு 8.42 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது, அதன் ஆரம்ப இலக்கான 8 மில்லியனைத் தாண்டி பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஒன்பது மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான புதிய இலக்கை மாநில அரசு நிர்ணயித்துள்ளது என்று சிலாங்கூர் உள்ளாட்சி, சுற்றுலா மற்றும் புது கிராமங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ இங் சூ லிம் கூறினார்.
மலேசிய வருகை ஆண்டு 2026-ஐ முன்னிட்டு, சிலாங்கூரின் சுற்றுலாத் திட்டங்களின் தொடர்ச்சியை உறுதிசெய்ய, மாநிலத்தின் சுற்றுலா மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரே நாளில் வந்து திரும்பும் பயணிகளை உள்ளடக்காமல், சிலாங்கூரில் குறைந்தது ஓர் இரவு தங்கும் சுற்றுலாப் பயணிகளை மட்டுமே இந்த எண்ணிக்கை கணக்கில் கொள்கிறது.
இதன் மூலம், சுற்றுலாப் பொருளாதாரத்தில் உண்மையான தாக்கத்தை இந்தத் தரவுகள் பிரதிபலிப்பதை உறுதி செய்ய முடிகிறது.
சிலாங்கூர் வருகை ஆண்டு நிகழ்ச்சி, மலேசிய வருகை ஆண்டு 2026-க்கு இணையாக அடுத்த ஆண்டு வரை தொடரும். 2025-ஆம் ஆண்டின் கருப்பொருள் "Surprising Selangor" ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான புதிய கருப்பொரு)ளாக "Selangor Kan Ada" முன்மொழியப்பட்டுள்ளது.


