டாக்கா, பிப் 8 - நிப்பா வைரஸ் பாதிப்பால் வங்காளதேசத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை உலக சுகாதார நிறுவனமான WHO உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த மாத இறுதியில் அப்பெண்ணுக்குக் காய்ச்சல், சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை வங்காளதேச சுகாதார அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், இதுவரை எந்த புதிய சம்பவமும் கண்டறியப்படவில்லை என WHO தெரிவித்தது.
நிப்பா வைரஸ் பொதுவாக வௌவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுவதாகவும், சில சமயங்களில் மனிதரிலிருந்து மனிதருக்கும் பரவக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், உலகளவில் நிப்பா வைரஸ் பரவும் அபாயம் தற்போது குறைவாகவே உள்ளது என்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் WHO தெரிவித்துள்ளது.


