தொலை இயக்கி பாரந்தூக்கி சரிந்து விழுந்ததில் வெளிநாட்டுத் தொழிலாளி மரணம்

7 பிப்ரவரி 2026, 7:15 AM
தொலை இயக்கி பாரந்தூக்கி சரிந்து விழுந்ததில்  வெளிநாட்டுத் தொழிலாளி மரணம்

கோலாலம்பூர், ஜாலான் பேராக் பகுதியில் நேற்று இரவு 'ஸ்பைடர் லிஃப்ட்' (Spider Lift) ரக பாரந்தூக்கி சரிந்து விழுந்ததில், அதனை இயக்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய வங்காளதேசத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின்  தலைவர் ஏசிபி முகமட் ஜம் சூரி முகமட் ஈசா, நேற்று இரவு 10.40 மணியளவில் சாலையோரத்தில் உள்ள கட்டிடத்தின் பெயர்ப்பலகையை சரிசெய்யும் பணியில் அந்தத் தொழிலாளி ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டதாகக் கூறினார்.தொலைஇயக்கி மூலம் இயக்கப்பட்ட அந்தப் பாரந்தூக்கி, நடைபாதையின் விளிம்பில் மோதியதால் நிலைதடுமாறி கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தின்போது பாரந்தூக்கி தொழிலாளி மீது விழுந்ததுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த புரோட்டோன் பெர்சோனா மற்றும் BMW ஆகிய இரு வாகனங்களின் மீதும் மோதியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் அந்தத் தொழிலாளி ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்ட வாகனங்களில் இருந்த ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம், கோலாலம்பூர் மாநகராட்சி வழங்கிய வேலை அனுமதி பத்திரம் மற்றும் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறை விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் பிரிவு 41(1)-இன் படி இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. இது குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் துன் எச்.எஸ். லீ போக்குவரத்துப் போலீஸ் நிலையத்தையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.