கோலாலம்பூர், 15 ஜனவரி: வடகிழக்கு தாய்லாந்தில் கட்டுமான கிரேன் ஒன்று பயணிகள் இரயிலின் மீது விழுந்து ஏற்பட்ட கோர விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. இந்த விபத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 9.45 மணிக்கு பேங்காக் நகருக்கு வடகிழக்கே சுமார் 230 கி.மீ தொலைவில் உள்ள நக்கோன் ராட்சசிமா மாகாணத்தின் சிகியூ மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தாய்லாந்துக்கான மலேசியத் தூதர் டத்தோ வான் ஜைடி வான் அப்துல்லா தெரிவித்தார். இதில் குறைந்தது 64 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூவர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
“காயமடைந்தவர்கள் அனைவரும் தாய்லாந்து குடிமக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. இதுவரை வெளிநாட்டினர் யாரும் பாதிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்படவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 5.20 மணி வரையிலான தகவல்களின்படி, இந்த விபத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை,” என்று அவர் பெர்னாமாவிடம் (Bernama) தெரிவித்தார்.
இந்த இரயிலில் சுமார் 195 பயணிகளும் பணியாளர்களும் இருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தாய்லாந்து போக்குவரத்து அமைச்சர் பிபாத் ரட்சகித்பிரகார்ன் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுமானப் பணிக்கு பொறுப்பேற்றுள்ள ‘இத்தாலியன்-தாய் டெவலப்மென்ட்’ (Italian-Thai Development Public Company Limited) நிறுவனம், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


