பந்திங், பிப் 7: பண்டிகைக் காலங்களில் மக்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைக்க உதவுவதோடு, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை உறுதி செய்யும் நோக்கில் சிலாங்கூர் மாநில அரசு 'ஜோம் ஷாப்பிங்' திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பந்திங் மாநிலச் சட்டமன்ற தொகுதிக்கு RM160,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள 800 பயனாளிகளுக்குத் தலா RM 200 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று காலை பந்திங் ஈகோன் சேவ் (Econsave) வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்த வவுச்சர் விநியோக நிகழ்வில் சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் கலந்து கொண்டார். இந்த பற்றுச் சீட்டைப் பெற்ற பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணப்பட்டதாக அவர் கூறினார். மேலும் வரவிருக்கும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இந்த உதவி பெரும் அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் சேர்த்துள்ளதாக தொகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். “மாநில அரசின் இத்தகைய முயற்சிகள், மக்கள் நலனில் அக்கறை கொள்வதோடு, சமூகத்தின் நல்வாழ்வை முதன்மைப் படுத்துவதில் சிலாங்கூர் அரசின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று பாப்பாராய்டு தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநிலப் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் (UPEN) துணை இயக்குநர் புவான் இடாயு அமிமா, பந்திங் சட்டமன்றத் தொகுதி பணியாளர்கள், எக்ஸோ (EXCO) அலுவலக குழுவினர் மற்றும் உள்ளூர் தலைவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாகக் கோல லங்காட் நகராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமத் தலைவர்கள் மற்றும் தொகுதித் தலைவர்கள் ஒருங்கிணைந்து இந்த வவுச்சர் விநியோகத்தை மிகவும் நேர்த்தியாகவும் முறையாகவும் நடத்திக் கொடுத்ததாக அவர் கூறினார். பந்திங் தொகுதி மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
800 பயனாளிகளுக்கு RM200 'ஜோம் ஷாப்பிங்' பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டது
7 பிப்ரவரி 2026, 7:04 AM






