ஷா ஆலம், பிப் 7: கடந்த 2023 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சாலை விதிகளை மீறிய வெளிநாட்டு ஓட்டுநர் களுக்கு எதிராக சாலைப் போக்குவரத்து வாரியம் மொத்தம் RM25.3 மில்லியன் மதிப்புள்ள 482,742 அபராதங்களை வழங்கியுள்ளது. சாலை விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக 'வெளிநாட்டு ஓட்டுநர்கள் மீதான நடவடிக்கை' (Ops PEWA) தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று அதன் சட்ட அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ முகமட் கிப்லி மா ஹசான் தெரிவித்தார்.
அதே காலப்பகுதியில், வெளிநாட்டினர் ஓட்டிய 15,789 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அபராதம் விதிக்க பட்டவர்களில் ரோஹிங்கியா, வங்காளதேசம், இந்தோனேசியா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 462,835 ஆகும்.
மேலும், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் நாட்டு ஓட்டுநர்களும் அதிக அளவில் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது எவ்வித பாகுபாடுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார்.சாலை விதிகளை மீறும் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு எதிராக அபராதம், வாகனங்களைப் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் சமரசமின்றி எடுக்கப்படும் என ஜேபிஜே எச்சரித்துள்ளது.
அதே வேளையில், தகுதியான ஆவணங்கள் மற்றும் உரிமம் இல்லாத வெளிநாட்டினரை வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ முகமட் கிப்லி எச்சரித்தார்.
சாலை பாதுகாப்பை உறுதி செய்ய மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.


