பண்டார் பாரு பாங்கி, பிப். 6: தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மாட்டு வியாபாரி ஒருவர் இன்று பண்டார் பாரு பங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட 33 வயதான டத்து முகமது எஃபெண்டி டத்து முகமது சாலே, மாஜிஸ்திரேட் சைரா பானு முகமது அஷ்ரோப் ராஜா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அதைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்தார்.
இருப்பினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அவரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
திருமணமான அந்த ஆடவர், 44 வயதான நூருல் ஹுடா மகா லிடின் என்ற ஆசிரியை, பண்டார் பாரு பாங்கி, செக்ஷன் 3, பெர்சியாரான் பெக்கிலிலிங் என்ற இடத்தில், ஜனவரி 29, இரவு 11 மணி முதல் ஜனவரி 30, அதிகாலை 3.32 மணிக்குள் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்கு, மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ விதிக்கப்படலாம்,அத்துடன் 12 பிரம்படிகளுக்கு மிகாமல் தண்டனை விதிக்கப்படலாம்.
இரசாயன மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழக்கை ஒத்திவைக்குமாறு துணை அரசு வழக்கறிஞர் சித்தி நூர் அலியா சஃப்ரி கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர் தரப்பு வழக்கறிஞர்களான அரவிந்த் ராஜ் மற்றும் செரீனா பால் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, வழக்கின் மறு செவிமடுப்பிற்காக ஏப்ரல் 2 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.


