ஷா ஆலாம், பிப் 6: பந்திங், கம்போங் ஸ்ரீ சீடிங் பகுதியில் இன்று அதிகாலை மூன்று வீடுகளைச் சேதப்படுத்திய தீ விபத்தில் மூன்று வயது சிறுவன் உடல் கருகி உயிரிழந்தான்.
அதிகாலை 2.44 மணியளவில் இது குறித்த அவசர அழைப்பு தங்களுக்குக் கிடைத்ததாகக் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார். அதைத் தொடர்ந்து, தெலுக் பாங்லிமா காராங், பாந்திங் மற்றும் கேஎல்ஐஏ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து 17 வீரர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
"ஆரம்பகட்ட அறிக்கையின்படி, தீ விபத்தில் மூன்று வீடுகள் சம்பந்தப்பட்டிருந்தன, ஒவ்வொன்றும் 90 விழுக்காடு எரிந்து நாசமாகின," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். "வீட்டிற்குள் மூன்று வயது சிறுவன் சிக்கியிருப்பதாக ஆரம்பத்தில் தகவல் கிடைத்தது," என்றார் அவர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தவுடன், தீயை அணைக்கும் மற்றும் சிறுவனை மீட்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன என்று அகமது முக்லிஸ் கூறினார். அதிகாலை 3.30 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
"சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அதிகாலை 4.15 மணியளவில், பிரதான படுக்கையறையில் சிறுவன் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டான்," என்றார் அவர்.



