ஷா ஆலம், பிப் 6: சுபாங் ஜெயாவில் உரிமம் இல்லாமலும் வரி செலுத்தாமலும் மதுபானங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கிடங்கு ஒன்றில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுபாங் ஜெயா மாநகரசபையின் அமலாக்கப் பிரிவு உதவி அதிகாரி, முஹமட் சுலைமான் அப்துல்லா தலைமையில் இந்தச் சோதனை நடைபெற்றது. இதில் MBSJ அமலாக்க அதிகாரிகளுடன், சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் (IPD) சேர்ந்த 14 போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களும் ஆதரவளித்தனர்.
இந்த சோதனையின்போது, MBSJ தரப்பு பறிமுதல் அறிவிப்பு மற்றும் உணவு விற்பனை நிலையத்தை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதேவேளையில், போலீஸார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், பல்வேறு வகையான மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர்.
"கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் மேலதிக நடவடிக்கைக்காக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்," என்று MBSJ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, மாநகரசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என MBSJ தெரிவித்தது.
"எனவே, கிடங்கு உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எப்போதும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது. இதற்கிடையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான புகார்களை MBSJ-யின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலமாகவோ அல்லது 019-220 7823 என்ற வாட்ஸ்அப் எண்ணில் அமலாக்கத் துறையைத் தொடர்பு கொண்டோ தெரிவிக்குமாறு பொதுமக்களை MBSJ ஊக்குவிக்கிறது.


