ஷா ஆலம், பிப்ரவரி 5 — மலேசியர்கள் தங்களின் RM 100 ரஹ்மா அடிப்படை உதவித்தொகை (சாரா) பெறுவதற்கான தகுதியை இன்று முதல் sara.gov.my என்ற அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் வாயிலாகச் சரிபார்க்கலாம். இந்த ஒரு முறை வழங்கப்படும் நிதியுதவியானது, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 22 மில்லியன் குடிமக்களுக்குப் பயனளிக்கும் என்று நிதி அமைச்சின் கார்ப்பரேட் தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.
'மடாணி' அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்ட 22 மில்லியன் மலேசியர்களுக்கு உதவும் வகையில் இந்த RM100 நிதியுதவியை வழங்குகிறது என்று கடந்த மாதம் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார். இந்தத் தொகை வரும் பிப்ரவரி 9, 2026 முதல் பயனாளர்களின் அடையாள அட்டையில் வரவு வைக்கப்படும். இந்த உதவித்தொகை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மலேசிய குடிமக்களுக்கு மட்டுமே உரித்தானது என்றும், ஏற்கனவே மாதாந்திர 'சாரா' உதவித்தொகையைப் பெறுபவர்களும் இந்த 100 ரிங்கிட் நிதியுதவியைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.


